articles

img

தமிழகத்திற்கேற்ற நகரமயமாதல் கொள்கை தேவை! - என்.குணசேகரன்

திட்டமிடாத,மக்கள் நலனை மையப்படுத்தாத வளர்ச்சி பேரிடர் பாதிப்புகளை  மேலும் மேலும் அதிகரித்திடும். இதனை தவிர்க்க வேண்டுமெனில், நகர்ப்புறக் கொள்கை உருவாக்கத்தில் அரசின்  அதிகார வர்க்கத்தினரை மட்டுமே ஈடுபடுத்துவது கூடாது. அது, பலன்தராது. மாறாக மக்கள் பங்கேற்புடன் ஆய்வுகளும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சமூகத்தின் அடித்தட்டு உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்வது, படைப்பாக்கத்துடன் கூடிய புதுமை யான திட்டங்கள் உருவாக்குவது என அனைத்திலும் கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முன்னோடியாகத்  திகழ்கிறது. நகரமய மாதல் கொள்கைகளைப் பின்பற்றுவதிலும் கேரள  அரசு நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. நகர்ப்புறத் தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்பாட்டினை மையமாகக் கொண்டு  நகர்ப்புற வடிவமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் 20 அன்று நடைபெற்ற கேரள  அரசின் அமைச்சரவை கூட்டத்தில் கேரளத்தின் நகர்ப்புற வளர்ச்சியை திட்டமிட “நகர்ப்புறக் கமிஷன்” ஒன்றை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.அந்த கமிஷனின் செயல்பாட்டு வரம்புகள், ஆய்வுப் பணிகள், அதன் கட்டமைப்பு போன்றவை குறித்து  தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டுள்ளன.

கேரளாவின் நகர்மய நிலைமை 
தென்னிந்தியாவில் வெகுவேகமாக நகரமயமாகி வரும் மாநிலமாக கேரளா திகழ்கிறது. கேரளாவில், 2035 ஆம் ஆண்டில், மொத்த மக்கள் தொகையில் 90  சதமான மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்திடும் நிலை  ஏற்படவுள்ளது.

கேரள மாநிலத்தின் நகர்ப்புறக் குடியிருப்பு தன்மை வித்தியாசமானது. நகர்ப்புறங்களின் வர்த்தக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிப்பிட்ட இடங் களில் குவிந்திருக்கும் நிலை அங்கு இல்லை. மாறாக, விரிவாகப் பரந்து விரிந்த நிலையில் குடியிருப்புப் பகுதி கள் அமைந்துள்ளன. இதற்கேற்ப நகர்ப்புற வடி வமைப்புத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற கமிஷன் கேரளாவிற்கு ஏற்ற நகர்ப்புற வடிவமைப்பினை திட்ட மிட உள்ளது.

இதற்கேற்ப, பல்வேறு துறை வளர்ச்சியை மாற்றி யமைக்க வேண்டிய தேவை உள்ளது. தொழில், வீட்டு வசதிகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற பிரச்சனைகள், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் கேரள நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டி யுள்ளது.

இந்தத் தேவைகளுக்கு ஏற்றவாறு கேரளா விற்கென்று ஒரு நகர்மயமாதல் கொள்கையை உருவாக்கும் பணியை தற்போது அமைக்கப்பட்டுள்ள கேரள நகர்ப்புறக் கமிஷன் மேற்கொள்ளும். இந்த  புதிய நகர்மயமாதல் கொள்கை ஒரு புதிய கேர ளத்தை உருவாக்கும் நோக்குடன், உடனடி மற்றும் நீண்ட கால செயல்திட்டங்களை கொண்டுள்ளதாக இருக்கும்.

நகர்ப்புறக் கமிஷன் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி  நிர்வாகத்திற்கான ஆலோசனைகளை உருவாக்கி டும். கழிவு மேலாண்மை, போக்குவரத்து தொழில் நுட்பம், மனித இடப்பெயர்ச்சி, நிதி மேலாண்மை, உள்ளூர் பொருளாதார மேம்பாடு, நில மேம்பாடு, கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது போன்ற அம்சங்களில் கமிஷன் பரிந்துரைகளை உருவாக்கிடும்.

உள்ளூர் அரசாங்கங்கள் 
உள்ளூர் அரசாங்க அமைப்புக்களாகத் திகழ்கிற நகர்ப்புற உள்ளாட்சிகளின் அதிகாரங்கள், நிதி ஆதாரங்களை மேம்படுத்தினால்தான் மக்கள் நலனுக்கான நகரமயமாதல் நடைபெறும்.இந்த அடிப்படை புரிதலோடுதான் கடந்த காலத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய மாநில அரசாங்கங்கள் செயல்பட்டு வந்துள்ளன

.உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப்பரவல் அடிப்படையை பலப்படுத்தும் ஆலோசனைகளை உருவாக்கிட வேண்டுமென கேரள அரசாங்கம் நகர்ப்புறக் கமிஷனின் முக்கிய பணியாக நிச்சயித்துள்ளது. இந்தக் கமிஷன் 13 உறுப்பினர்கள் கொண்டது.

இந்த உறுப்பினர்கள் அனைவரும் நகர்மயமாதல் துறை நிபுணர்கள். தற்போது கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சதிஷ்குமார் சர்வதேச அளவில் இந்தத் துறையில் புகழ் பெற்றவர். நகர்மயக் கொள்கைகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டுள்ள பல அனுபவங்களை இந்தக் கமிஷன் ஆய்வு செய்திடும்

;அவை தொடர்பான விரி வான தகவல்களை திரட்டிடும். இதற்கென்று தனித்தனி ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்படும் .நகர்மயம் பற்றி பல நிபுணர்களுடன் கமிஷன் விவாதிக்கும்.  இது போன்ற பல நிபுணர்கள் குழுக்கள், உள்ளூர் மட்டத்தில் நீண்ட காலம் குடியிருக்கும் உள்ளூர் சமூகத்தின் அறிவினையும் அனுபவத்தினையும் கண்டு கொள்வதில்லை.

இதனால் நிபுணர்கள், அதி காரிகளால் மட்டுமே உருவாக்கப்படும் கமிட்டி களின் பரிந்துரைகள் பயனற்றுப் போன அனு பவங்கள் ஏராளமாக உண்டு.ஆனால் கேரள அரசு அமைத்துள்ள நகர்ப்புறக் கமிஷன் உள்ளூர் மட்ட அனுபவ அறிவையும் ஆய்வு செய்திடும்.

இந்தியாவிலேயே முன்னோடி முயற்சி

2018 ஆம் ஆண்டு ஒன்றிய  அரசு தேசிய நகர்ப்புறக் கொள்கையை அறிவித்தது. அதில் பல குறைபாடுகள் இருந்தன. அது, நவீன தாராளமய நோக்கில் உருவாக்கப்பட்ட கொள்கை. அந்த கொள்கை அறிக்கையில் மாநிலங்கள் தங்களுக்கென்று மாநில நகர்மயமாதல் கொள்கை உருவாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

இது மட்டும் பலரால் ஏற்கப்பட்ட கருத்தாக அமைந்தது. தற்போது இந்தியாவிலேயே நகர்ப்புறக் கமிஷன் அமைத்து நகர்ப்புறக் கொள்கை உருவாக்கும் முன்னோடி முயற்சியை கேரளா மேற்கொண்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்று தமிழகத்தின் மாறுபட்ட நகர்மயத் தன்மைகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை உருவாக்கிட நகர்மயமாதல் கமிஷன் உருவாக்க வேண்டும்.

இந்த கோரிக்கை நீண்ட காலம் இருந்து வந்துள்ளது. இது பல நகர்மய  நிபுணர்களின் கருத்து மட்டுமல்ல, தமிழக நகர்ப்புற மக்களின் தேவையாகவும் அமைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு பல எதிர்காலப் படிப்பினைகளை எடுத்துரைக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் இயங்கியதால் நிவாரணப் பணிகள் உடன் மேற்கொள்ள முடிந்தது. அதே போன்று அரசாங்கத்தின் துறைகள் அனைத்தும் இடைவிடாது செயல்பட்டதால் 2015 கனமழை ஏற்படுத்தியது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடிந்தது. எனினும்  மழை நீர் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்னை பாதிப்பு போன்றே தென் மாவட்டங்களி லும் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இந்நிகழ்வுகள், நீர் மேலாண்மையில் சரியான திட்டங்களும்,அறிவியல்ப் பூர்வமான  உடனடி, நீண்ட கால தீர்வுகளின் தேவையை வலியுறுத்துகின்றன. இதுபோன்ற பேரிடர் ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்றே அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஒவ்வொரு முறை எதிர்பாராத கனமழை பெய்கிற போதெல்லாம், மக்கள் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. திட்டமிடாத வளர்ச்சி, காலநிலை மாற்றம், மேல் தட்டு வர்க்கங்களின் நலனை மையப் படுத்திய நகர்மயமாதல் கொள்கைகள் போன்ற பல  பிரச்சனைகளால் மக்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.

சென்னை நீர்வழி ஆதாரங்கள் 
நீண்ட காலமாக சென்னை நகரில் நீர் நிலைகள் பராமரிப்பு இல்லாதது, ஆக்கிரமிப்பு, நீர்நிலைப் பகுதிகளில் வரம்பற்ற முறையில் சட்ட விரோத கட்டுமானங்கள் என்ற பல்வேறு காரணங்களால் நீர்வழித் தடங்கள் சிதைக்கப்பட்டு வந்துள்ளன. இனிமேலும் இது போன்ற நிலை நீடித்தல் கூடாது. சென்னையின் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு உள்ளிட்ட நீர் வழிகளும், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், தற்போது எழுப்பப்பட்டுள்ள மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அனைத்தும் ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும். மூன்றாவது மாஸ்டர் பிளான் அடிப்படையில் சென்னையின் பரப்பளவு 5904 சதுர  கிலோமீட்டர் அளவில் விரிவடையும் என்று கூறப்படுகிறது.இந்த பரப்பளவில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட ஏரிகள், வெள்ளத் தடுப்பு பகுதிகள் சதுப்பு நிலங்கள் அனைத்தையும் பாதுகாத்திட உரிய திட்டங்கள் உரு வாக்கப்பட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். திட்டமிடாத,மக்கள் நலனை மையப்படுத்தாத வளர்ச்சி பேரிடர் பாதிப்புகளை மேலும் மேலும் அதிகரித்திடும்.

இதனை தவிர்க்க வேண்டுமெனில், நகர்ப்புறக் கொள்கை உருவாக்கத்தில் அரசின்  அதிகார வர்க்கத்தினரை மட்டுமே ஈடுபடுத்துவது கூடாது. அது, பலன் தராது. மாறாக மக்கள் பங்கேற்பு டன் ஆய்வுகளும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதற்கு, தமிழகத்தின் நகர்ப்புறத் தன்மைகளுக்கு ஏற்றவாறு, சரியான, அறிவியல் ரீதியான நகரமயமாதல் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு கேரளா போன்று நகர்ப்புறக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.